புதிய பாதையை நோக்கி ...
இம்மன்றம் மாணவர்கள் பலர் கூடிப் பல பொருள்கள் பற்றிப் பேசித் தம் சொல்லாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும என்ற நோக்கத்துடனேயே தொடக்கத்தில் பணியாற்றி வந்தது, அந்த இளம் பருவத்திலேயே இம்மன்றம் அறிஞர்கள் பாராட்டக்கூடிய பல அருஞ்செயல்களைச் செய்துள்ளது. சென்னையில் உள்ள உயர்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கொண்டு சென்னைக் கடற்கரையில் மாணவர் மாநாடு நடத்திய பெருமை இம்மன்றத்திற்கு உண்டு. இதுவே சென்னையில் நடைபெற்ற 'முதல் மாணவர் மாநாடு' என்று கூறலாம். மற்றும் இலக்கிய வகுப்புகள் நடத்துதல், மாணவர்களுக்குப் பல துறைகளிலும் அறிவு ஆற்றல் வளரப் பலவகைப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கல், சான்றோர்களைக் கொண்டு ஆங்காங்குத் தமிழ் விரிவுரைகள் ஆற்றச் செய்து தமிழ் வளர்த்தல் ஆகிய இத்துறைகளிலேயே மன்றம் தொடக்க காலத்தில் பணியாற்றி வந்தது.